Monday 4 April 2011

எல்.ஏ. கான்ஃபிடென்ஷியல் - ஆங்கில திரைப்பட விமர்சனம்


எல்.ஏ. கான்ஃபிடென்ஷியல் (L.A. Confidential) ஆங்கில திரைப்படம் 1997ல் வெளிவந்து விமர்சகர்களால் பெரிதளவு பாராட்டப்பட்டு, ஒன்பது ஆஸ்கார் (Oscar) விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம். அதில் இரண்டு ஆஸ்கார் விருதுகளையும், அமெரிக்காவின் மிக முக்கிய நான்கு விமர்சகர் அமைப்புகளிடமுமிருந்து (The National Board of Review, The New York Film Critics Circle, The Los Angeles Association of Film Critics & The National Society of Film Critics), மிகச் சிறந்த திரைப்படத்திற்கான விருதினையும், லண்டன் திரைப்பட விமர்சகர் குழுவால் (London Film Critics' Circle) சமீபத்திய முப்பது வருட திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த திரைப்படங்களுள் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம். அதுமட்டுமில்லாது, அதுவரை ஓரிரு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்திருந்த ரஸ்ஸல் குரோவிற்கு (Russell Crowe) இத்திரைப்படம் மூலமாகவே மிக பெரிய அங்கீகாரம் உலகளவில் கிடைத்தது என்பதிலிருந்து இத்திரைப்படத்தின் தரத்தினை நாம் உணரலாம்.

ஜேம்ஸ் எல்ராய்
சிறந்த திரைப்படங்கள் அதன் மதிப்பினை அவை உருவாகும் தருணத்தில் பெரும்பாலும் பெறுவதில்லை. அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இத்திரைப்படத்தினை கூறலாம். ஏனெனில், திரைப்படத்தின் இயக்குனர் கர்டிஸ் ஹன்சன் (Curtis Hanson), திரைப்படத்தின் மூலமான அதே பெயரினைக் கொண்ட நாவலை தன் தயாரிப்பாளர்களான வார்னர் பிரதர்ஸ் (Warner Bros.) -யிடம் திரைப்படமாக கொண்டு வரலாம் எனக் கூறியபோது அவர்கள் ஒப்புக்கொண்ட போதிலும் அதனை எழுதிய ஜேம்ஸ் எல்ராய் (James Elroy)  அதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் அவரின் முந்தய நாவல்களில் சில திரைப்படங்களாக எடுக்கப்பட்டிருந்தன. அதில் எந்த திரைப்படமும், அவருக்கு முழுவதுமான திருப்தி அளிக்கவில்லை. அதுமட்டுமில்லாது அந்நாவலின் கதை கிட்டத்தட்ட எட்டு பிரதான நிகழ்வுகளின் கோர்ப்பாகவும் அவை ஒவ்வொன்றும் ஒன்றுகொன்று தொடர்புடைய பல சிறு நிகழ்வுகளின் வாயிலாக ஒன்று சேர்வதாக மிக கடினமான கதை உள்ளடக்கத்தினை கொண்டிருந்தது. இதனால் இதனை தெளிவாக ஒரு திரைப்படமாக கொண்டு வருவது சாத்தியமில்லை என்றே நம்பியிருந்தார். எனினும் இயக்குனர் கர்டிசின் நம்பிக்கையின் பேரிலும், வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பாக இருந்ததின் காரணத்தினாலும் அவர் அரை மனதுடன் ஒப்புக் கொண்டார். ஆனால் பிறகு திரைப்படத்தினை கேன்ஸ் (Cannes) திரைப்பட விழாவில் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்து பின்வருமாறு தெரிவித்தார். 

"இத்திரைப்படம் என் வாழ்வில் நிகழ்ந்த சிறந்த நிகழ்வுகளுள் ஒன்று. இத்தகைய சிறந்த தரத்தினை கொண்ட திரைப்படத்தின் மூலத்தை (நாவல்)  எழுதும் இவ்வாறான நிகழ்வு இனி எப்போதும் எனக்கு நிகழபோவதுமில்லை."   

ரஷ்ஷல் க்ரோவ்
திரைப்படம் மூன்று காவலதிகாரிகளை முக்கிய கதாப்பாத்திரங்களாக கொண்டு லாஸ் ஏஞ்சல்ஷில் நடைபெற்ற ஒரு கொலை நிகழ்வினை மேற்சொன்ன மூவரின் வெவ்வேறான பார்வையில் 1950 -களின் பின்னணியில் ஆராய்கிறது. மூவரில் முதலாவதாக, பட் ஒயிட் (Russell Crowe) ஒரு முரட்டுத்தனமான காவலதிகாரி. தன் சிறுவயதில் தன் தந்தையால் தன் தாய் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டதை கண்டு வளர்ந்ததால் எந்த ஒரு பெண்ணையும் துன்புறுத்தும் நபரை கண்டவுடன் தானாக முன் நின்று அவனை அடித்து அவன் குற்றத்தை புரியவைக்க முயல்பவன். குற்றம் புரிந்தவனுக்கு தண்டனை வழங்குவதில் சட்டம்  தாமதித்தால் தானே அவர்களுக்கு தண்டனை வழங்கி நியாயத்தை நிலைநாட்ட முயல்பவன்.

கெவின் ஷ்பேஷி
இரண்டாம் அதிகாரி, ஜேக் வின்சென்ஷ் (Kevin Spacey) காவல் துறை ஒளிபரப்பும் தொலைகாட்சியில், ஹானர் ஹாஃப் பேட்ஜ் (Honor of Badge) என்ற நிகழ்ச்சியின் தொழில்நுட்ப அறிவுரையாளராக பணிபுரிபவன். அவன், தன் முகம், முக்கிய நாளிதழ்களில் இடம்பெறுவதற்காக அன்றிருந்த ஹாலிவுட் நடிகர்களின் போதை பழக்கத்தினை அம்பலமாக்கி தன்னை ஒரு பிரதான பிரமுகராக காட்டிக்கொள்ளவும் செய்தான். அதுமட்டுமின்றி ஹஷ்.. ஹஷ்... (Hush Hush) என்ற நாளிதழின் ஆசிரியர் சிட் ஹுட்கேன்ஸ் (Danny DeVito) என்பவனுக்கு ஹாலிவுட் பிரமுகர்களை பற்றிய உண்மைகளை வதந்திகளாக கூறி அதற்கு கமிஷனும் பெற்று வந்தான்.

கை பியர்ஸ்
இறுதியாக, எட்மன்ட் எக்ஷ்லே (Guy Pearce) புதிதாய் வேலைக்கு சேர்ந்த ஒரு நியாமான அதிகாரி. எதையும் நேர்மையாக சட்டத்தின் மூலமாக நிறைவேற்ற எண்ணுபவன். இவன் தந்தை மிக பெரிய காவலதிகாரியாக பணியாற்றி ஒரு கள்வனை பிடிக்கும் தருணத்தில் அவனால் கத்தியால் குத்தப்பட்டு இறந்தவர். இதனால் தன தந்தையை விட பெரிய சாதனைகளை புரிந்து தன பெயரினை நிலைநாட்டும் உத்வேகத்துடன் உழைப்பவன்.

ஒரு இரவு லாஸ் ஏஞ்சல்ஷில் உள்ள ஒரு தேநீர் விடுதியில் கிட்டத்தட்ட ஒரு பெண் உட்பட ஆறு பேர் கொள்ளப்பட்டு கிடப்பது தெரிந்து எட்மன்ட் சம்பவ இடத்திற்கு வருகிறான்.  அதில் ஓரிரு மேசிக்கன் (Maxican) குற்றவாளிகளை நிறவெறியினால் அடித்த காரணத்திற்காக தன்னால் சாட்சி சொல்லப்பட்டு அன்று வேலையிழந்த பட் ஒய்ட்டின் நண்பன் டிக் ஷ்டன்ஷ்லேன்டின் (Graham Beckel) சடலத்தையும் கொல்லப்பட்ட சடலங்களுடன் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறான். பின்னர் அவன் தலைமையில் அந்த கொலைகளை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

பட் ஒயிட், தன் நண்பன் கொலையானது அறிந்து, அதே கேஷினை தனக்கு தெரிந்த கொலையான பெண்ணின் விவரங்களுடன் புலனாய்கிறான். அந்த பெண்ணின் விவரங்கள் மற்றும் அவளது தொடர்புகள், லென் ப்ராகன் (Kim Basigner) என்ற ஒரு விபசாரியினிடம் அவனை கொண்டு செல்கிறது. அவள் மூலமாக பட், அவள் மற்றும் கொலையான பெண் போன்ற பல பெண்கள் நடிகைகள் போல தங்கள் வடிவத்தினை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றி விபச்சாரத்தில் ஈடுபடுவது அறிகிறான். இதற்கு பின்னணியில் இருப்பது லாஸ் ஏஞ்சல்ஷில் உள்ள மிக பெரிய பணக்காரன் பியர்ஸ் ப்ராச்சட் (David Strathairn) என்பதும் அவனுக்கு தெரிய வருகிறது. இவ்வழக்கு விசாரணையில், பட், லென்னுடன் மிக நெருக்கமாக பழக ஆரம்பித்திருந்தான்.  

அதே நேரம், எட்மன்ட் அந்த தேநீர் விடுதியில் சம்பவம் நடந்த அன்று வெகு நேரம் நின்றிருந்த ஒரு காரின் அடையாளங்களை அங்கிருந்தவர்கள் மூலம் அறிந்து கொள்கிறான். அவன், அந்த காரின் மூலம் விசாரித்ததில், சிறு சிறு களவுகள் செய்யும் மூன்று நீக்ரோ இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். அதில் ஒருவன் கொடுத்த வாக்கு மூலத்தில், அவர்கள் மூவரும், அந்த தேநீர் விடுதியினை கொள்ளையடிப்பதற்காக முயன்ற பொழுது அவ்விடுதியின் காசாளர் தன் துப்பாக்கியை அவர்கள் நோக்கி சுட முயல வேறு வழியின்றி தாங்கள் அவனை சுட்டதாகவும், அந்த அமளிதுமளியில் சிலரை சுட நேர்ந்ததாகவும் கூறபட்டிருந்தது. பிறகு, அவர்கள் சிறையிலிருந்து  தப்பித்து ஒரு லாட்ஜில் தஞ்சமடைகின்றனர். இதனை எட்மன்ட் உளவறிந்து, அவர்களை அங்கே என்கொவுண்டர் செய்து கொலை செய்கிறான். இவ்வாறாக இந்த வழக்கு முடிய, இதில் பெரும்பகுதி உண்மைகளை கண்டுபிடித்த என்மன்ட்டிற்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

ஜேக், ஹஷ் ஹஷ் நாழிதளுக்காக லாஸ் ஏஞ்சல்ஷின் சில பிரபல அரசியல் பிரமுகர்களின் ஓரினச்சேர்க்கை அந்தரங்கத்தை அம்பலபடுத்தும் பொருட்டு ஒரு வாய்ப்பு தேடிவந்த  இளைஞனுடன் ஓரிரு திட்டங்கள் வகுக்கிறான். அன்றிரவே அந்த இளைஞன் மர்மமாக அவன் தங்கியிருந்த லாட்ஜில் கொலை செய்யப்படுகிறான். ஜேக் இந்த கொலைக்கும் தேநீர் விடுதியில் நடந்த கொலைக்கும் தொடர்பு இருப்பதை பின்னர் எட்மன்ட்டுடன் சேர்ந்து கண்டறிகிறான். அப்பொழுது, ஜேக்கிற்கும், எட்மன்ட்டிற்கும் இந்த கொலைகளுக்கான காரணம் வேறு எனத் தெரிய வருகிறது. இதற்கு தங்கள் காவல் துறையை சேர்ந்த உயரதிகாரிகள் பலர் உடந்தை என கண்டுபிடிக்கின்றனர்.

பிறகு ஜேக்கும், எட்மன்ட்டும் ஓரணியில் நின்று உண்மையை கண்டறிய முற்பட, அதே வழக்கினை பட் ஒயிட் தன் தலைமையதிகாரி டட்லி ஸ்மித் (James Cromwell) உத்தரவின் பேரில் அவருடன் இணைந்து கண்டறியும் போது, இவ்விரு அணிகளும் ஒன்றுகொன்று எதிரான பாதையில் மாற பல நிகழ்வுகள் நிகழ்கிறது. இதற்கு மூலக்காரணம் யார் என தெரிந்து கொண்ட ஜேக், அந்த நபராலேயே சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் கொலை செய்யப்படுவதிலிருந்து திரைப்படம் நாம் முற்றிலும் எதிர்பாராத கோணத்தில் திரும்பி அதுவரை அங்கொன்றும் இங்கொன்றும் சம்பந்தமில்லாமல் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து, உண்மை ஒவ்வொன்றையும் அசாதாரண வேகத்தில் கூறாமல் கூறி திரைப்படம் முடிவுபெறுகிறது.

கிம் பேசின்ஞர்
திரைப்படத்தின் உருவாக்கம் குறித்து பேசும்போது, முக்கியமாக நியோ-நோய்ர் (Neo-Noir) திரைப்பட வகை குறித்து புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக தமிழ் திரைப்படங்களில் நாம் இத்தகைய புலனாய்வு திரைப்படங்களை காணும்பொழுது, புலனாயப்படும் நிகழ்வு எவ்வாறு, எங்கு, யாரால், எந்த காரணத்திற்காக என்பதை படம் முடியும் தருவாயில் அக்கு வேறு ஆணி வேறாக  விளக்கப்படுவதை நாம் பல திரைப்படங்களில் கண்டிருக்கிறோம். பெரும்பாலும் இத்தகைய விளக்கங்கள், இந்திய திரைப்படங்களில், குற்றவாளி அல்லது வில்லன் தன்னிடம் அகப்படும் கதாநாயகனை உடனே கொல்லாமல் தான் செய்த கொலையினை அல்லது குற்றத்தினை எதற்கு ஏன் செய்தான் என்பதை தன் பெருமையை பறைசாற்றும் விதமாக கூறும் விதமாக பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்துவது வாடிக்கை.  இத்தகைய காட்சிகள் மிக வேடிக்கையாக தோன்றும் போதிலும் பார்வையாளர்களுக்கு எப்படியாவது ஒரு சம்பவத்தின் பின்னணியினை தெரியபடுத்த இயக்குனர்கள் முயற்ச்சிக்கும் உத்தி என்பதை ஒப்புகொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில், பார்வையாளர்கள் திரைப்படம் ஒன்றும் புரியவில்லை என புறக்கனித்துவிடுவர் என்ற ஐயம் இயக்குனர்களை இவ்வாறு காட்சியமைக்க தூண்டுகிறது.

ஆனால் நியோ-நோய்ர் திரைப்படங்கள் பொதுவாக இத்தகைய எந்த காட்சிகளையும் உள்ளடக்கி இருக்காது. ஏனெனில் பொதுவாக இத்தகைய திரைப்படங்கள், பார்வையாளர்களிடம், வெறுமனே திரைப்படத்தின் கதையை காண்பிக்காமல் ஒவ்வொரு நிகழ்வும் எதற்காக நடக்கிறது என்பதை பார்வையாளர்களே யூகிக்கும் வண்ணம் மிகவும் குழப்பமான திரைக்கதையுடன் நகரும். இறுதியில் ஒரு மிகப்பெரிய முடிச்சு அவிழும் பொழுது பிற காட்சிகள் அனைத்தும் ஏன் நிகழ்ந்தது என்பதை பார்வையாளர்களே முடிவெடுக்கும் வகையில் அதன் இறுதிகாட்சி அமைந்திருக்கும். கிட்டத்தட்ட நாம் நிஜத்தில் ஒரு சம்பவத்தினை  பற்றி பலரின் மூலம் பகுதி பகுதியாக கேள்விப்படும்போது அவை முழு விளக்கத்துடன் இல்லாதபோதும் நாம் ஒருவாறு இவை இதற்காகத்தான் நிகழ்ந்திருக்கும் என ஒரு தெளிவு நிலைக்கு வருவது போன்றதான ஒரு அனுபவத்தை கொடுப்பது இத்தகைய திரைப்படங்கள்.

கர்டிஸ் ஹன்சன்
அத்தகைய திரைப்படங்களின் வரிசையில் மிக முக்கிய பத்து திரைப்படங்களுள்  இத்திரைப்படம் இடம்பெருமளவிற்கு இத்திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் இயக்கம் அமைந்திருக்கிறது. இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கர்டிஸ் தன் முப்பது வருட திரையுலக அனுபவத்தினையும் இந்த ஒரு திரைப்படத்தில் வெளிக் கொணர்ந்திருப்பார். ஏனெனில் இத்திரைப்படத்தில் அவர் பேசாத சமுக பிரச்சினையே இருந்திருக்காது எனுமளவுக்கு 1950ல் லாஸ் ஏஞ்சல்ஷில் காணப்பட்ட முக்கிய பிரச்சினைகளான போதை பொருள் கலாச்சாரம், ஓரினச்சேர்க்கை, விபச்சாரம், கடத்தல், நிறவெறி, அதிகார துஷ்ப்ரயோகம், பெண் கொடுமை என அனைத்து விஷயங்களையும் கூறியிருப்பார். அதுமட்டுமில்லாது பதவி வேட்கை, காதல், குற்ற உணர்ச்சி போன்ற மனம் சார்ந்த உணர்வுகளை தன் பிரதான மூன்று காவலதிகாரி கதாபாத்திரங்களின் மூலம் அழகாக வெளிபடுத்தியிருப்பார்.  கர்டிஸ் மற்றும் ப்ரையன் ஆகியோருக்கு திரைக்கதைக்காக ஆஸ்கார் விருது அளிக்கப்பட்டது மற்றுமோர் சிறப்பு. 

திரைப்படத்தின் மிக முக்கிய இன்னொரு பலம் கதாப்பாத்திரத் தேர்வு. இத்திரைப்படத்தின் மிக முக்கிய கதாப்பாத்திரங்களாக அமைந்த மூன்று காவலதிகாரி கதாப்பாத்திரங்களில் இரண்டிற்கு, அன்று ஹாலிவுட்டில் அதிகம் அறிமுகமில்லாத ஆஷ்திரேலிய நடிகர்கள் ரஷ்ஷல் க்ரோவ் மற்றும் கை பியர்ஸ் ஆகியோரை நடிக்க வைத்ததிலிருந்தே இத்திரைப்பட குழுவின் சாதுர்யத்தையும், தையரியத்தையும் அறியலாம்.  அதிலும், ரஷ்ஷல் க்ரோவ் குற்றவாளிகளிடம் முரட்டுத்தனமாக நடக்கும்போதிலும், துன்பப்படும் பெண்களிடம் பரிவு காட்டும் நேரத்திலும், நம் முழு கவனத்தையும் பெறுகிறார். கெவின் ஷ்பேஷி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை இத்திரைப்படத்திலும் நிருபீத்திருக்கிறார். கிம் பேசின்ஞர் தன் சிறந்த நடிப்பிற்காக ஆஸ்கார் விருதினைப் பெற்றார். 1997-ல் வெளிவந்த டைடானிக் திரைப்படம் தன் பிரம்மாண்ட தயாரிப்பு மற்றும் எதிர்பார்ப்பால் இத்திரைப்படத்திற்கு எதிராக அனேக ஆஸ்கார் விருதுகளை அள்ளிசென்ற போதிலும், மிக நேர்த்தியான திரைப்படங்களின் வரிசையில், டைடானிக் மட்டுமல்லாது அதிக ஆஸ்கார் விருதுகளை பெற்ற திரைப்படங்களை விட இது முன்னணியில் நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

எல்.ஏ. கான்ஃபிடென்ஷியல் - ஒரு கடந்து போன சமூகத்தின் அவலம்.

ட்ரெயிலர்

Friday 25 March 2011

நெவர் லெட் மீ கோ - ஆங்கில திரைப்பட விமர்சனம்


நெவர் லெட் மீ கோ (Never Let Me Go) திரைப்படம், உலக இலக்கிய விருதுகளில் மிக உயரிய விருதான, புக்கர் விருதை (Booker Prize) பெற்ற,  ஹாசு இஷிகாரோ (Kazuo Ishiguro) அவர்களின் நாவலினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். இந்த நாவலும் புக்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டைம் (Time) நாளிதழ் கடந்த நூறு ஆண்டுகளில் வெளிவந்த மிகச் சிறந்த நாவல்களுல் ஒன்றாக இதனை அறிவித்து பாராட்டியது.  

ஹாசு இஷிகாரோ
பொதுவாக நாவல்களை மையமாக கொண்ட திரைப்படங்கள் வெளிவரும் பொழுது, திரைப்படத்தைக் காட்டிலும் நாவல் சிறந்ததாக இருந்தது என்றும், நாவல் கொடுத்த தாக்கத்தினை திரைப்படம் ஏற்படுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும். சமிபத்தில் கூட மறைந்த சுஜாதா அவர்களின்  நாவலினை அடிப்படையாக கொண்டு தமிழில் வெளிவந்த ஆனந்த தாண்டவம் திரைபடம் இத்தகைய காரணங்களினால் தோல்வியை தழுவியது நமக்கு நினைவிருக்கும்.  ஆனால் மிகச் சில திரைப்படங்கள் மட்டுமே அவற்றின் அடிப்படையான நாவல்களைக்  காட்டிலும் நன்றாக இருந்தது என நாம் கொண்டாடும் அளவிற்கு பெயர்தட்டி செல்லும். அவ்வாறான திரைப்படங்களுள் இது பிரதான இடத்தை பிடிக்குமளவிற்கு இதன் தாக்கம் நம்மை பேச வைக்கும்.

இத்திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஸன் (Science Fiction) வகையினை சேர்ந்தது. நாம் பல சயின்ஸ் ஃபிக்ஸன் (Science Fiction) திரைப்படங்களை பார்த்திருப்போம். இவ்வகை திரைப்படங்கள் பொதுவாக வருங்காலத்தில் என்னவெல்லாம் நிகழக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளது என்பதை ஊகித்து அதற்குள் கற்பனை கதாபாத்திரங்களை உலாவவிட்டு ஒருவிதமான சாகச அனுபவமாக திரையில் தோன்றும். சென்ற ஆண்டில் திரைக்கு வந்த அவதார் (Avatar) திரைப்படம் மிகச் சரியாக மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் தன்னுள் கொண்டு உலகம் முழுதும் மிகப் பெரும் வெற்றியை பெற்றதிலிருந்து இத்தகைய திரைப்படங்களின் ஆளுமை ஹாலிவுட்டில் அதிகம் என்பதை சுலபமாக சொல்லிவிடலாம்.  ஆனால் இங்கு காணும் இத்திரைப்படத்தில் நாம் எதிர்பார்க்கும் மேற்கூறிய அம்சங்கள் எதனையும் பார்க்க முடியாது. மாறாக ஒரு பெண்ணின் கடந்த காலத்தை மிக நுண்ணிய உணர்வுகளின் குவியலாக பிரதிபலித்திருப்பது இத்திரைப்படத்தின் சிறப்பு. 

இருபத்தெட்டு வயதான கேதி ஹெச் (Kathy H), தன் பள்ளி நினைவுகளை விவரிக்கும் விதமாக திரைப்படம் துவங்குகிறது. கேதி, ஹெயில்ஷம் (Heilsham Boarding School) என்ற  விடுதிப் பாடசாலையில் தன் தோழி ரூத் (Ruth) உடன் படித்து வருகிறாள். கேதி மிகவும் நிதானமான பெண். எந்த ஒரு குற்றத்திற்கும் பின்னும் உள்ள குற்றவாளியின் மண தூண்டுதலை புரிய முயர்ச்சிப்பவள். வாழ்க்கையில் பெரிய கனவுகள் ஏதும் இன்றி வாழ்க்கை தருபவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு வாழ்பவள். மாறாக, ரூத் மற்றவர்களை அதிகாரம் செய்பவள். வாழ்க்கையில் தான் நினைத்த அனைத்தும் நடக்கும் என நினைத்து கனவுலகில் மிதப்பவள். தன் சுயநலத்திற்காக மற்றவர்களை பயன்படுத்தி கொள்பவள்.

காரே முல்லிகன்
ஹெயில்ஷம் பள்ளி அவர்களை சிறைபடுத்தியிருந்தது. அங்கு படிக்கும் மாணவர்களை வெளியுலக தொடர்பில்லாது வைத்திருந்தது. ஒருநாள், கேதியின் வகுப்பு மாணவன்  டாமி (tommy), பிற மாணவர்களால் இகழப்படுவதை கண்டு கேதி அவனுக்கு உதவ அவனிடம் செல்கிறாள். டாமி அவர்கள் மேலுள்ள கோபத்தில் இவளை அறைந்து விடுகிறான். இதற்கு பின்னும் கேதி அவனுடன் அன்புடன் பழகுகிறாள். டாமிக்கும் கேதியின் நட்பு பிடித்திருந்தது. அவளது நட்பு அவனை மற்றவர்களின் இகழ்ச்சிகளை இயல்பாக எடுத்துகொள்ள செய்தது. கேதி மற்றும் டாமி நட்புடன் பழகுவது மெல்ல காதலாக மாறுவதை ரூத்தால் உணர முடிந்தது. ரூத் கேதியின் புதிய காதலை கண்டு பொறாமையடைந்து அவனை தன்வசம் வர செய்ய, அவனிடம் அவனை தான் காதலிப்பதாக தெரிவித்து டாமியை தன் காதலனாக்கி கொண்டாள். டாமி அவனை இகழ்ந்த ரூத்தை தன் காதலியாக ஏற்றது, கேத்திக்கு ஆச்சர்யத்துடன் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.  

ஒரு கட்டத்தில், பள்ளி ஆசிரியை ஒருவரால் ஹெயில்ஷம் பள்ளியில் வளரும் அவர்கள் மனிதர்களுக்கு செயலிழந்த இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் வழங்க அவர்களின் மாதிரி ஜீன்களை கொண்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட குளோன்கள் என்பது தெரிய வருகிறது. ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. அதே நேரம், கேதி டாமியை ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்திருந்தாள். மற்ற பள்ளி பருவ காதலர்கள் முரண்பாட்டால் விலகும் பொழுது, டாமி மற்றும் ரூத் இருவரின் காதல் பலமாக வளர்ந்திருந்தது. 

கேரா நைட்லீ
பிறகு சில ஆண்டுகள் கழித்து, பள்ளி கல்வி முடிவடைந்த நிலையில், டாமி, ரூத் மற்றும் கேதி காட்டேஜ்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்குதான் அவர்கள் தங்கள் உறுப்பு தானம் செய்ய அழைப்பு வரும்வரையில் தங்க வேண்டியிருந்தது. இவர்களை போல பல பள்ளிகளை சேர்ந்த குளோன் மாணவர்கள் அங்கு குழுமி தங்கியிருந்தனர். அவர்களுள் இரு காதலர்கள் இவர்களிடம் ஹெயில்ஷம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் டிஃபெரல் (Differal ) சலுகையினை எவ்வாறு மற்ற பள்ளி மாணவர்கள் பெறுவது என வினவினர். தங்களுக்கு அது போன்ற சலுகை அளிக்கப்படுவது பற்றி தெரியாது என இவர்கள் கூற அவர்கள் அதனை பற்றி விளங்க கூறினர்.

அதாவது, ஹெயில்ஷம் பள்ளியில் படித்த இருவர் உண்மையிலேயே காதல் கொன்டிருந்தால், அதை அவர்கள் நிருபீக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சில ஆண்டுகள் சேர்ந்து வாழ அனுமதிப்பதற்காக அச்சலுகை இருப்பதாக அவர்களால் கூறப்பட்டது. அதோடு, இச்சலுகை காலத்தில் அவர்கள் தங்கள் உறுப்புகளை தானம் தர அவசியமில்லை எனவும் கூறினர். பிறகு ரூத் கேதியை வெறுப்பேற்றும் விதமாக டாமியை அவள்முன் கட்டிபிடித்து கொஞ்சினாள். இதனால் வெறுப்படைந்த கேதி, தான் உறுப்பு தானம் தரும் வேலை வரும் வரை, அங்கிருந்து வேறு இடத்திற்கு அவர்களை விட்டு செல்ல, தானம் தரும் மற்ற குளோன் இளைஞர்களுக்கு (Donor) பணிவிடை புரியும் செவிலியாக (Carer) பணியாற்ற முன்வந்தாள். இதனால், அவள் வேறு, வேறு நகரங்களுக்கு அனுப்பபட்டாள். 

பிறகு சில ஆண்டுகள் கழித்து, ரூத்தை, ஒரு மருத்துவமனையில் அவளின் மூன்றாவது உறுப்பு தானம் செய்யும் தருணத்தில் எதேச்சையாக கேதி சந்திக்கிறாள். பிறகு அவளுக்கு கேரராக பணிவிடை புரிகிறாள். ரூத், அவளுக்கும், டாமிக்கும் உண்டான காதல் காட்டேஜிலேயே முறிவடைந்ததை பற்றி கேத்தியிடம் கூறுகிறாள். அதோடு அவனும் தன் இரண்டு உறுப்பு தான ஆபரேஷன்கள் முடித்துவிட்டான் என்பதையும் அவளுக்கு கூறி மூவரும் எங்காவது சுற்றுலா சென்று வரலாம் என தெரிவிக்கிறாள். அவ்வாறாகவே மூவரும் அருகிலுள்ள கடற்கரைக்கு செல்கின்றனர். 

அங்கு ரூத், தன் பொறாமையினால்தான், டாமியை கேதியிடமிருந்து அபகரித்ததாகவும், நிஜத்தில் அவர்கள் இருவர் மட்டும்தான் உண்மை காதல் கொண்டுள்ளனர் எனவும் கூறி தன்னை மன்னிக்குமாறு கேதி மற்றும் டாமியிடம் கூறுகிறாள். பிறகு ரூத் தன்னிடம்  டிஃபெரல் சலுகையை தரும் ஆசிரியையின் முகவரி உள்ளது என்று கூறி அதனை கேதி மற்றும் டாமி கைகளில் தருகிறாள். 

முதன்முறையாக கேதி தன் வாழ்க்கையை பற்றி கனவு காண்கிறாள். பிறகு அவர்களின் விதி அவர்களை மறுபடியும் பிரிக்கபோகிறது என்பதை அறியாது, இருவரும் ரூத் கூறிய ஆசிரியையிடம் அச்சலுகையை பெற செல்கின்றனர்.... 

ஆன்ரூ கார்ஃபில்டூ 
திரைப்படத்தின் மிக முக்கியமான அம்சமாக கதாப்பாத்திரத் தேர்வு அமைந்துள்ளது. கேதியாக வரும் காரே முல்லிகன் (Carey Mulligan) தன் மெல்லிய முக பாவனைகளின் மூலம் தன் வலியினை உணர்த்துவதிலிருந்தே அக்கதாபாத்திரத்தின் ஸ்திரத்தன்மை எங்கெங்கு திரைப்படத்தில் உடைகிறது என்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக வாழ்க்கையில் எதுவுமே கைகூடாத நிலையில் மரணம் மட்டுமே முடிவு என்கிற நிலையில் தன் உறுப்பு தான அழைப்பிற்காக காத்திருக்கும் அந்த இறுதி தருணங்கள் நிச்சயமாக பார்க்கும் நம்மில் மரணத்தின் வலி மற்றும் வாழ்க்கை வெறும் வெற்றிடமாக மாறும்போது ஏற்படும் மன சுமையை ஓங்கி உரைக்கிறது. அத்தகைய இக்கட்டான முடிவையும் வாழ்க்கையின் இயல்பு எனக் கருதி தன் வேலையை மட்டும் செய்துகொண்டு அமைதியாய் இருப்பது கேதி கதாப்பாத்திரத்தை மற்றவற்றுடன் மிக சுலபமாக வேறுபடுத்தி காட்டுவதோடு அல்லாமல் வாழ்க்கை இயல்பை எடுத்துரைக்கிறது.    

ரூத் கதாபாத்திரம் இரண்டு பரிமாணங்களாக காட்டப்பட்டுள்ளது. சிறுவயதில் தன் வாழ்க்கை பற்றிய எதிபார்ப்புகளுடன் பிறரை மதிக்காது தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு மட்டும் தன் நண்பர்களை பயன்பத்துவது, பின் தன் இளமை காலத்தில், எதிர்பார்ப்பு ஏதும் நிறைவேறாமல் மரணத்திற்காக மட்டும் காத்து கிடக்கும்போது தன் குற்றங்களை ஒப்புக்கொண்டு அதற்கு பிராயிசித்தம் தேடுவது என எந்த ஒரு சராசரி மனிதனையும் அச்செடுத்து வார்த்தது போலான பாத்திரப்படைப்பு. இத்தகைய உணர்ச்சிபூர்வமான கதாபாத்திரங்களை சரித்திர படங்களில் ஏற்று நடித்த அனுபவத்தில் கேரா நைட்லீ (Keira  Knightley) இந்த ரூத் கதாப்பாத்திரத்தில் பிரமாதபடுத்துகிறார். 

டாமியாக வரும் ஆன்ரூ கார்ஃபில்டூ (Andrew Garfield) தன் இயல்பான நடிப்பினால் அந்த கதாபாத்திரதிற்குரிய மனக்குமுறல்களை வெளிபடுத்துகிறார். இத்திரைப்படத்தின் இசை, கதையின் போக்கோடு கரைந்து உருகுகிறது. மனித உணர்சிகளுக்கு மட்டுமே கதையில் முக்கியத்துவம் என்பதால் குளோனிங் மற்றும் இதர அறிவியல் சார்ந்த விவரங்கள் மற்றும் அதன் சாத்தியம் போன்றவை இதில் பேசப்படவே இல்லை. 

நீங்கள் இத்திரைப்படத்தை எவ்வித அறிமுகமுமின்றி காணும்போது உண்மையிலேயே இவ்வாறு நடந்தும் இருக்ககூடும் என நம்பவைக்கும் விதம் திரைக்கதை நம்மை ஒரு கொடிய வரலாறை படிப்பதை போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது. 

நெவர் லெட் மீ கோ - வாழமுடியாதவர்களின் குரல்.

ட்ரெயிலர்



Monday 14 March 2011

என்சாண்டட் - ஆங்கில திரைப்பட விமர்சனம்


என்சாண்டட் (Enchanted) ஆங்கில திரைப்படம், வால்ட் டிஸ்னியின் (Walt Disney) மற்றுமொரு க்ளாசிக் ஃபேண்டசி (Classic Fantasy) திரைப்படம். டிஸ்னி, கார்ட்டூன் திரைப்பட வரலாற்றில் ஒரு சக்ரவர்த்தியாக திகழ, இந்நிறுவனம் எடுத்த ஃபேரி டேல் (Fairy Tale) திரைப்படங்கள் ஒரு மிகப்பெரிய காரணம் என்றே கூறலாம். அவ்வகையில் இத்திரைப்படமும் டிஸ்னிக்கே உரிய  ஃபேரி டேல் கதை சாயலில் அதே நேரம் இக்காலத்துக்கு ஏற்ற வகையில் நவீனமாக்கப்பட்ட புனைவுக் கதையை அடிப்படையாக கொண்ட ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம். அதுமட்டுமில்லாது மூன்று ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டத் திரைப்படம். 

 ஃபேரி டேல் கதைகள் என்கிற பொழுது, நமக்கு பெரும்பாலும் நினைவில் வருபவை, நாம் நம் பள்ளி நாட்களில் ஆங்கில பாடத்தில் படித்த சூன்யக்காரிகளும், மந்திரவாதிகளும் நிரம்பிய கதைகளே. அவை பொதுவாக ராஜா ராணி காலத்தில் நடைபெருபவையாக இருக்கும். ஈ முதல் டிராகன் வரை மனிதரோடு பழகி உரையாடும். கண்டிப்பாக "நலம்" என்று இறுதியில் எண்டிங் நோட் (Ending Note) போடுமளவுக்கு மகிழ்ச்சிகரமான முடிவை கொண்டதாக இருக்கும்.  நீங்கள் இதை எல்லாம் யூகித்திருந்தால் கண்டிப்பாக இத்திரைப்படத்திலும் இத்தகைய விஷயங்களை நீங்கள் காணலாம். பின் என்ன இதில் நவீனம் என்று கேட்டபது புரிகிறது. இவை அனைத்தும் நிகழ் காலத்தில் நியூ யார்க் நகரத்தில் நடைபெற்றால் என்னவாகும் என்பதை நகைச்சுவை மற்றும் காதல் சேர்த்து சிறுவர் முதல் அனைவரையும் கவரும் வகையில் திரைப்படமாக எடுத்துள்ளனர். 

எல்லா ஃபேரி டேல் கதைகளை போல, ஒரு நாள், அண்டாலஷியா (Andalasia) என்ற ஒரு மாய உலகில் கனவில் மட்டுமே கண்ட ராஜ குமாரனுக்காக காத்திருக்கும் ஜிஷைல் (Giselle), தன் காதலனை எண்ணி உருகி பாடலொன்றை பாட, காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த ராஜகுமாரன் எட்வர்ட் (Edward) அதை கேட்டு மயங்கி,  தனக்கான பெண் இவளே என்று முடிவெடுத்து அவளை காண விரைகிறான். பிறகு இருவரும் பார்த்த தருணத்திலேயே காதல் மலர இருவரும் அன்றே மணமுடிக்க முடிவெடுக்கின்றனர். ஒரு சாதாரண கும்பத்தை சேர்ந்த பெண் ஜிஷலை ராஜ குமாரியாக விரும்பாத எட்வர்டின் மாற்றாந்தாய் ராணி நரிஷா, தன் மந்திர ஆற்றலால் அவளை சபித்து தன் பேச்சுக்கு கட்டுப்படாத போலீஷை அரசியல்வாதி, தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றுவது போல் ஜிஷலை பூமியில் உள்ள மணமுறிவு (Divorce) அதிகமாக நிகழும் நியூ யார்க் நகருக்கு அனுப்புகிறாள். 

ஜிஷல் செய்வது அறியாது நியூ யார்க்கில் தவிக்கிறாள். எப்படியும் தன் காதலன் எட்வர்ட் தன்னை மீட்டு மறுபடியும் அண்டாலஷியாவிற்கு அழைத்து செல்வான் என நம்பி வீதியில் அமர்ந்த்ருக்கிறாள். அப்பொழுது மணமுறிவு வழக்குகளை எடுத்து நடத்தும் வழககறிஞர், ராபர்ட் அவளை ஆதரித்து தன் விட்டில் தங்க அனுமதிக்கிறான். ஜிஷல் விட்டை சுத்தம் செய்ய, பெருக்க தன் மயக்கும் ஒலியால் புறாக்களையும், எலிகளையும் அழைத்து வேலை வாங்குகிறாள். இதனைக் கண்ட ராபர்டின் மகள் சிறுமி மொர்கன் அவளை ஃபேரி டேல் கதைகளில் வரும் ஒரு ராஜகுமாரி என நம்புகிறாள். அவளை தேடி எட்வர்ட் நியூ யார்க் வருகிறான். அதே நேரத்தில் எட்வர்ட் ஜிஷலை சந்திக்காத வண்ணம் தடுக்க, நரிஷா தன் மெய்க்காவலன் நதேநியளிடம் (Nathaniel) தன் மந்திர ஆப்பிள்களைக் கொடுத்து அவனை நியூ யார்க்கிற்கு அனுப்புகிறாள்.

நதேனியல் ஜிஷலை கொல்ல அந்த மந்திர ஆப்பிள்களில் ஒன்றை அவள் உண்ணுமாறு செய்ய வேண்டும். அதற்காக அவன் விதவிதமான வேடங்களில் வந்து ஆப்பிள்களை அவளுக்கு அளிக்கிறான். ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் உண்ணாமல் தப்பிக்கிறாள். இதனால்,  நரிஷா அவன் மேல் கடும் கோபம் கொள்கிறாள்.

ராபர்டின் காதலி நான்சி(Nancy), ஜிஷல் ராபர்ட் விட்டில் இருப்பதை தவறாக எண்ணி ராபர்டுடன் சண்டையிட்டு பிரிகிறாள். ஜிஷல், ராபர்ட்டிர்காக மலர்களை நூற்று அதில் அதற்கு மறுநாள் நடைபெறும் கிங் அண்ட் கியீன் பால் கலை நிகழ்ச்சியின் நுழைவுச்சீட்டை வைத்து கட்டுகிறாள். பிறகு தன் ஒலியால் புறாக்களை அழைத்து அம்மாலையினை நான்சியிடம் கொடுக்குமாறு புறாக்களுக்கு சொல்கிறாள். இதனை கண்டு ராபர்ட் ஆச்சர்யமடைந்ததொடு அல்லாமல் புறாக்கள் எவ்வாறு நான்சியிடம் அதனை சேர்க்கும் என வினவி அவளை ஒரு வெகுளி என நினைக்கலானான்.

ராபர்ட் ஜிஷலின் வெகுளித்தனத்தால் அவள்பால் கவரப்படுகிறான். தன் மகளுடன் உள்ள அவளின் அன்யோன்யத்தை கண்டு தனக்கு அவள் மனைவியாக அமைந்தால் நன்றாக இருக்கும் எனவும் நினைக்கிறான். ஆனால் ஜிஷல் எட்வர்டுக்காக காத்திருப்பதை எண்ணி அதனை அவளிடம் மறைத்து ஒரு நண்பன் போல் பழகலானான். ஜிஷல் ஒரு சில மணி நேரமே பழகிய எட்வர்டை விட தன்னை யார் என்றே தெரியாத போதிலும் தன்னை அன்பாக நடத்தும் ராபர்ட்டிடம் தன்னையுமறியாமல் காதலில் விழுந்தாள்.


இத்தகைய மனப் போராட்டத்தில் இருவரும் இருக்க, எட்வர்ட் ஜிஷலை கண்டு பிடித்து அவளை அண்டாலஷியாவிற்கு கூட்டி செல்ல வருகிறான். ஜிஷல் ராபர்ட்டை பிரிய மனமில்லாது எட்வர்டிடம் தான் நியூ யார்க்கில் நடைபெறும் கிங் அண்ட் கியீன் பால் கலை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அண்டாலஷியா செல்லலாம் என கூறுகிறாள். அதே நேரம், நான்சிக்கு ராபர்ட்டின் மாலை புறாக்களால் வந்தடைகிறது. அம்மாலையினை கண்டு அன்று இரவு நான்சி சமாதானமடைந்து, ராபர்ட்டுடன் கலை நிகழ்ச்சிக்கு வருகிறாள். எட்வர்டும், ஜிஷலும் அதே கலை நிகழ்ச்சிக்கு வருகின்றனர்.

இனிமேலும் நதேநிஎளை நம்ப கூடாது என்றெண்ணி நரிஷா தானே ஜிஷலை கொல்ல கலை நிகழ்ச்சிக்கு வருகிறாள். நரிஷா, தன் வஞ்சக வார்த்தைகளால் ஜிஷலை நம்ப வைத்து ஆப்பிளை சாப்பிட வைக்கிறாள். சாப்பிட்டதும் ஜிஷல் அனைவரின் முன்பு மயங்கி விழுகிறாள். அவளை காப்பற்ற ஒரே வழிதான் இருக்கிறது என்பதை ராபர்ட் அறிந்து அவளை காப்பற்ற முயலும் நேரம் அவளின் உண்மையான காதல் ராபர்ட் வசம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிய வருகிறது. பிறகு ஜிஷல் உயிர் பிழைத்து யாருடன் தன் மீத வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள் என்பதை திரைப்படம் அசாதாரண சாகசக் காட்சிகளுக்கிடையே காண்பிக்கிறது.

இக்கதையும், இதில் வரும் கதாப்பாத்திரங்களை தயார் செய்வதற்கும் மட்டுமே இதன் இயக்குனர் கெவின் லிமா (Kevin Lima) மற்றும் கதாசிரியர் பில் கெல்லிக்கு (Bill Kelly) எட்டு வருடங்கள் ஆகியிருக்கிறது. முதலில் இதன் திரைக்கதையை பார்த்த வால்ட் டிஸ்னி நிறுவனம் காதல் மற்றும் மணமுறிவு விஷயங்கள் கதையில் மேலோங்கி இருந்ததால் இத்திரைப்படத்தை குழந்தைகளுக்கான திரைப்படமாக இதனை எடுக்க முடியாது என்பதில் தீவிரமாக இருந்தது. இதனால் பில் கெல்லி இதன் திரைக்கதையினை டிஸ்னி அனுமதி அளிக்கும்வரை பலமுறை மாற்றிஎழுதி இறுதியில் 2006ல் திரைப்படத்தை துவங்கினர். 

ஜிஷல் கதாப்பாத்திரத்திற்காக முன்னூறுக்கும் மேற்பட்ட நடிகைகள்  பரிந்துரைக்கப்பட்டு அதில் எமி ஆடம்ஸ் (Amy Adams) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் நடிப்பு ஒன்றே இத்திரைப்படத்தின் மிக பிரதானமான வெற்றிக் காரணி என்று சொல்லுமளவுக்கு தனக்கே உண்டான நகைச்சுவை பாணியில் வெகுளித்தனமாக நடித்து வெழுத்து வாங்கியிருப்பார்.

விஷுவல் எஃக்ட்ஸ் (Visual Effects) மிக பிரமாதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அண்டாலஷியா என்ற மாய உலகில் நடைபெறும் விஷயங்கள் 2D அனிமேஷனிலும் நியூ யார்க்கில் நடைபெறும் சம்பவங்கள் நிஜமாகவும் எடுக்கப்பட்டிருப்பது வித்யாசமான முயற்சி. புறாக்கள் மற்றும் எலிகள் வீட்டை சுத்தம் செய்யும் காட்சியில் க்ளோஸ் அப்பில்(Close-Up) உள்ள இரு எலிகள் மற்றும் இரு புறாக்கள் தவிர மற்ற அனைத்தும் கம்ப்யூட்டர் கொண்டு 3D அனிமேஷனில் உருவாக்கப்பட்டு கிரீன் ஸ்கீரீன் டெக்னாலஜியில் நிஜக் காட்சிகளுடன் இணைத்துள்ளனர். 

இத்திரைப்படத்தில் பரவலாக பேசப்பட்ட முக்கிய அம்சங்களுள் மற்றொன்று இசை. வால்ட் டிஸ்னியின் பல படங்களுக்கு இசையமைத்த அலன் மேன்கேன் (Alan Menken) இதில் ஆறு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் மூன்று பாடல்களுக்கு ஆஸ்கார் விருது பரிந்துரைக்கப்பட்டது. 

ஃபேண்டசி, நகைச்சுவை, காதல் மற்றும் சாகசம் (Adventure) என அத்தணை சமாச்சாரங்களும் ஒரே ஆங்கில படத்தில் வழக்கமாக நம்மால் பார்க்க முடியாது. ஆனால். இத்திரைப்படம் அந்த அத்தனை விஷயங்களையும் தன்னுள் அகப்படுத்தி ஒரு தரமான பொழுதுபோக்கு சித்திரமாக வெளிவந்து வெற்றி பெற்றது.

ட்ரெயிலர் :

Saturday 5 March 2011

கிரேஷி / பியூட்டிஃபுல் - ஆங்கிலத் திரைப்பட விமர்சனம்


கிரேஷி / பியூட்டிஃபுல் (Crazy/Beautiful), 2001ல் வெளிவந்த அமெரிக்க பதின்ம வயது காதலை, இயல்பாக சித்தரிக்கும் திரைப்படம். வெறும் இனக் கவர்ச்சி மற்றும் இதர இச்சைகளை முழுவதுமாக மிகைபடுத்தி, இதுதான் பதின்ம வயதோர்க்கான திரைப்படம் என்கிற ரீதியில் மற்ற  பதின்ம (Teen Movies) திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த வேளையில்,   அவற்றைப் போல் அல்லாது இத்திரைப்படம்  முற்றிலும் புதுமையான அணுகுமுறையில் வேறுபடுகிறது. ஒரு புதிய கோணத்தில், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் முற்றிலும் வேறுபட்டுள்ள இருவருக்கு இடையேயான காதலை, அந்த வயதுக்கே உரிய பக்குவத்துடன் அவர்கள் இயல்பாக எதிர்கொள்ளும் விதமாக இத்திரைப்படம் உணர்ச்சிபூர்வமான காட்சிகளால் நகர்கிறது.   

கிரிஸ்டன் டன்ஸ்ட்
திரைப்படத்தில்,  நிக்கோல் ஓக்லி, ஆங்கிலேய பணக்கார அமெரிக்க சட்டமாமன்ற உறுப்பினரின் மகள். அடிப்படையில் தன் தாயின் தற்கொலையாலும், தன் தந்தையின் அலட்சியத்தாலும் மிகவும் மனச் சிதைவுக்குட்பட்டு, குடி மற்றும் போதை மருந்துகளில் மன அமைதியைத் தேடுபவள். தன் தந்தையின் இரண்டாவது திருமணம் அவளை மிகவும் பாதித்திருந்தது. தன் தாயை போலவே தன்னாலும் இவ்வுலகில் நிம்மதியாக வாழ முடியாது என நினைத்து பலமுறை தற்கொலைக்கு முயன்றவள். இதனால் வாழ்க்கையில் பெரிதான குறிக்கோளின்றி தன் தந்தையின் வற்புறுத்தலில், தன் பள்ளிப் படிப்பை தொடர்பவள். 

ஜே ஹெர்னாண்டஸ்
கார்லோஸ் நுயான்ஷ், அமெரிக்காவில் வாழும் ஸ்பானிய மொழி பேசும் மெக்சிக வம்சத்தைச் சேர்ந்த ஏழைத் தாயின் இளைய மகன். தன் ஐந்தாம் வயதில் தன் தந்தை தன் குடும்பத்தை விட்டு சென்றப் போதிலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மிதவாதி. தன் தாயால் மிகவும் கஷ்டப்பட்டு வளர்க்கப்பட்டவன். தன் வாழ்க்கையில் எப்படியாவது ஒரு விமான ஓட்டியாக வர, கடினமாக படித்து வரும் சாதாரண மாணவன். தன் விமான மாலுமி படிப்புக்கான அரசாங்க படிப்புதவிக்காக மனு கொடுத்துவிட்டு காத்திருப்பவன். 

கார்லோஸ், கடற்கரையில் நிக்கோல் தன் பள்ளி ஒழுக்கக்கேடுத் தண்டனைக்காக கடற்கரையை துப்புரவு செய்யும் வேலையில் ஈடுப்பட்டிருந்த நேரத்தில் அவளை சந்தித்தான். பின் இருவரும் ஒரே பள்ளியில் பயில்வதை அறிந்து நட்பு ரீதியில் பழக்கத்தை தொடர்ந்தனர். இருவரின் பழக்கமும் நாளுக்கு நாள் இருவரின் இடையே இன்றியமையாத ஒன்றாக வளர்ந்து இருவர் மனதிலும் விருட்சமாக வேருன்றியிருந்தது. நிக்கோல் பள்ளி விதிமுறைகளை மதிக்காது குடி மற்றும் இதர வழிகளில் செல்லும் பொழுது தன்னிலை மறந்து கார்லோஷும் அவளுடன் சுற்றலானான். இதனைக் கண்டு, கார்லோஸ், நிக்கோலுடன் பழகுவது அவனது படிப்பை மட்டுமன்றி அவனது குறிக்கோளையும் பாதிக்கும் எனக் கூறி அவனின் தாய் அவனை கண்டித்தாள்.  

ஒருநாள், நிக்கோல் கார்லோஷை தன் விட்டிற்கு அழைத்து வந்திருந்தாள். அப்பொழுது அவளது தந்தை கார்லோஷின் குறிக்கோளை அறிந்து தான் உதவுவதாக கூறி, வரும் வாரத்தில் ஓர் சமயத்தை (appointment time) குறிப்பிட்டு தன்னை தன் அலுவலகத்தில் சந்திக்குமாறு கூறினார். கார்லோஸ், நிக்கோலின் தந்தையை அவரின் அலுவலகத்தில் சந்தித்த பொழுது அவர் தன் மகளை பற்றி குறிப்பிட்டு, அவள் தன் வாழ்க்கையை அழித்துக் கொள்வது மட்டுமன்றி தன்னுடன் பழகும் அவனது வாழ்க்கையையும் அழிக்க கூடிய நடத்தையை கொண்டவள் எனக் கூறி அவனை அவளோடு பழகாதிருக்குமாறு அறிவுறுத்துகிறார். 

இப்படி, கார்லோஸ் தன்னை சுற்றி இருந்த அனைவரிடமுமிருந்து நிக்கோளுடன் இருந்த பழக்கத்தை துண்டிக்குமாறு அறிவுருத்தப்பட்டான். இதனால் கலக்கமடைந்த கார்லோஸ், நிக்கோளுடன் பழகுவதை முற்றிலுமாக நிறுத்தினான். அதே சமயத்தில், நிக்கோல் அவன்பால் ஒருதலையாக காதல்வயப்பட்டிருந்தாள். தன் தாய்க்கடுத்து தன்னை மிகவும் நேசித்த கார்லோஷின் மறுப்பு அவளை மீண்டும் பெருங்குடிகாரியாக மாற்றியிருந்தது. இதனால், நிக்கோலின் மாற்றந்தாய், அவளை விடுதி பாடசாலைக்கு (Boarding School) அனுப்புமாறு அவளது தந்தைக்கு ஆலோசனை கூறி அந்த ஆலோசனையை நிறைவேற்றவும் செய்கிறாள். 

கார்லோஷின் தேர்வு நேரம் நெருங்கியது. இத்தேர்வின் முடிவுகள் அவனை அவனது குறிக்கோளை அடைய உதவும் வழிகலனாக இருக்கும் என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். அதே சமயம், அவனால், முழு கவனத்துடன் தன் படிப்பில் ஈடுபட முடியவில்லை. நிக்கோலின் நினைவுகள் அவனை ஆட்டிப்படைத்தது. மற்றவர்களின் சொல்பேச்சு கேட்டு அவளை அந்நியப்படுத்தியது முட்டாள்த்தனமாக அவனுக்குப் பட்டது. 

இறுதியில், கார்லோஸ் பள்ளியில் இறுதி தேர்வேழுதும்போழுது, பள்ளியில் இருந்து விடுதி பாடசாலைக்கு வெளியேறும் நிக்கோலை பார்க்கிறான். உடனே தன் தேர்வையும் பொருட்படுத்தாது, நிக்கோலை தடுத்து தான் அவளை மனப்பூர்வமாக காதலிப்பதாகவும், அவளுடன் வாழ விரும்புவதாகவும் கூறிகிறான். பின் இருவரும் தன் குடும்பத்தினருக்கு ஏதும் சொல்லாமல் ஊரை விட்டு செல்கின்றனர். நிக்கோல், செல்லும் வழியில் தன்னால் தன் காதலன் குறிக்கோள் பாழாகிறது என்ற குற்ற உணர்ச்சியில் அழுது பின் ஓர் முடிவெடுக்கிறாள். அந்த முடிவு தன்னை அலட்சியப்படுத்திய தன் தந்தையை திருத்த உதவுவதோடு மட்டுமன்றி கார்லோஷின் குறிக்கோளையும் காப்பற்றுகிறது. (அந்த முடிவு என்னவாக இருக்கும் என்பதை இங்கு கூறி,  நீங்கள் திரைப்படம் பார்க்கும் தருணத்தில் உள்ள சுவாரஸ்யத்தை கெடுக்க மனமில்லாது, அதை சொல்லாமல் விட்டு விடுகிறேன்).    

பொதுவாக பதின்ம திரைப்படங்களை, திரையில் காணும்போது ஒருவிதமான அந்நியத்தன்மை வியாபித்திருக்கும். காரணம், அதில் வரும் கதாப்பாத்திரங்கள் இயல்பான இளைஞர்களை சித்தரிக்காது, அவர்களை உதாரிகளை போன்று காட்டி உண்மையிலிருந்து பெரும்பாலும் வேறுபட்டிருக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களின் நம்பகத்தன்மையும் அவற்றின் இயல்பான உருவகபடுத்தலினால் மெருகேற்றப்பட்டுள்ளது.

நிக்கோல் கதாப்பாத்திரம் கிரிஸ்டன் டன்ஸ்ட் (Kirsten Dunst) என்பவரால், சமுதாயத்தில் பலவேறு காரணங்களினால்  பாழ்பட்டுபோன பல இளைய வர்க்கத்தினரை மிக நேர்த்தியுடன் சித்தரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு பின்னர், கிரிஸ்டன் டன்ஸ்ட் ஸ்பைடர் மேன் (Spider Man) திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கார்லோஸ் நுயான்ஷாக வரும் ஜே ஹெர்னாண்டஸ் (Jay Hernandez) தன் கதாப்பாத்திரத்தை தன் அளவான நடிப்பால், கடைநிலை மாணவனின் இயல்பான ஆசைகளையும், உணர்ச்சியையும் பிரதிபலிக்கிறார். கார்லோஷின் தாயாக நடித்திருக்கும் சொலேடத் செயின்ட் ஹிலாரி (Soledad St. Hilaire) கணவனால் கைவிடப்பட்ட பல பெண்களின் (Single Mother) சரியான உவமையாக காட்டப்பட்டிருக்கிறார்.   

குறிப்பாக நிக்கோலின் தந்தையாக வரும்  ப்ரூஸ் டேவிசன் (Bruce Davison) மற்ற திரைப்படங்களில் வரும் தந்தை கதாப்பாத்திரங்களை போல அல்லாது, நிறப் பிரிவினைகளால் தன் மகளின் காதலை எதிர்க்காது, தன் மகளின் மூலம் அவளது காதலனின் வாழ்க்கை பாழ்படக்கூடாது என எண்ணி காதலை எதிர்ப்பது புதியது. 

இத்திரைப்படத்தில், காதல் மட்டுமன்றி, சமுதாய காரணிகள் எவ்வாறெல்லாம் மனித மனங்களை பாதிக்கிறது என்பதும் கூறப்பட்டுள்ளது. ஒரு மாறுபட்ட டீன் மூவியை காண விருப்பமிருப்போர் தாரளமாக கிரேஷி / பியூட்டிஃபுல் திரைப்படத்தை காணலாம். 

ட்ரெயிலர்:-

Saturday 26 February 2011

டேஞ்சரஸ் பியூட்டி - ஆங்கிலத் திரைப்பட விமர்சனம்



டேஞ்சரஸ் பியூட்டி (Dangerous Beauty), 1998 ல் வெளிவந்த, வரலாற்றை மையமாக கொண்டத் திரைக் காவியம். ஆனால் சரியான விளம்பரம் இல்லாத காரணத்தினால் இத்திரைப்படம் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை.  எனினும் இத்திரைப்படம் வரலாற்றை விரும்பும் எவரும், தவறாமல் பார்க்க வேண்டியத் திரைப்படம். ஏனெனில், இது வெரோனிக்கா ஃபிரான்கோ (Veronica Franco) என்கிற வரலாற்றைப் புரட்டி போட்ட புதுமை பெண்ணின் வாழ்க்கையை  சித்தரிக்கும் நல்ல திரைப்படம்.  

இத்திரைப்படம் வெனிஸ் நகரை கதைக்களமாக கொள்வதால் அந்நகரைப் பற்றிய அறிமுகம் இங்கே.

வெனிஸ் நகரம்
வெனிஸ் நகரம் ஒரு விந்தையான நகரம். அங்கு நாம் பயணிக்கும் தார் அல்லது மண் சாலைகளுக்குப் பதிலாக கால்வாய்கள் அமைக்கப்பட்டு படகுகளால் போக்குவரத்து இன்றளவும் மேற்கொள்ளப்படுகிறது. ஏனெனில், நகரமே தண்ணீரால் சூழப்பட்ட சதுப்பு நிலத்தில் அமையப் பெற்றது.  அதனால், அன்று பகைவர்களிடம் தப்பித்து வந்த ரோம் மக்கள், அந்நிலத்தில்  பல நூறு பைன் மரங்கள் செருகி அதன் மேல் தங்கள் வீடுகளை கட்டினர். ஆனாலும் மழை வந்து என்றுமே நீர் நகரைச் சுற்றி தேங்கியிருந்தது. அதனால் அவர்கள் நீரை கடலில் கொண்டு சென்று கலப்பதற்கு, வடிகால் முறையில் நகரின் இடையே  கால்வாய்கள் அமைத்தனர்.  பிறகு, அக்கால்வாய்கள் அந்நகர மக்களால்  போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்பட்டது.  

அந்நாளில் அங்கு திருமணம் ஆண்களால் வியாபாரம் போன்று கருதப்பட்டது. பெண் வீட்டார் மணமகனின் பதவி கல்விக்கு ஏற்றவாறு வரதட்சனை கொடுத்து தன் மகளை மணமுடித்து வைத்தனர். (இன்றளவும் நம் ஊரில் இதே நிலைமைதான்!) பிரபு குலத்தில் தங்கள் பதவிக்ககாக அல்லது ஆட்சி நிலத்தை விரிவு படுத்துவதற்காக தங்களுக்குள் திருமணங்கள் நடத்திக் கொண்டனர். பெண்களுக்கு, பெரும்பாலும் கல்வி மறுக்கப்பட்ட்டது.  ஆணின் விருப்பங்கள் பெரிதாக மதிக்கப்பட்டு பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது.  

அத்தகைய நகரில் கி.பி 1450ல் வெரோனிக்கா தன் பதினெட்டு வயதில் சக பெண்களை போல அல்லாது கதை மற்றும் கவிதைகளில் திளைத்திருந்தாள். கவிதை எழுதுவதில் கெட்டிக்காரியாகவும் இருந்தாள். வெரோனிகாவின் தோழி பிட்ரைஷின் (Beatrice) அண்ணன் மார்கோ (Marco) வெனிஸ் நகருக்கு வருவதாகத் திரைப்படம் துவங்குகிறது. பார்த்தமட்டிலுமே, இருவரும், ஒருவரின் ஒருவர் மேல் காதல் வயப்படுகின்றனர். மார்கோ பிரபு வம்சத்தை சேர்ந்தவன். மார்கோவின் தந்தை பீட்ரைஷை தன் சொந்த அரசியல் காரணங்களுக்காக ஒரு வயது முதிர்ந்த மேட்டுக்குடி பெரியவருக்கு மணமுடிக்கிறார். அன்றே அவர் மார்கோவை அழைத்து அவன் வெரோனிக்காவை காதலிக்கலாம் ஆனால் அவளை, அவன் எந்நாளும் மணமுடிக்கமுடியாது என எச்சரிக்கிறார்.   

வெரோனிக்கா 
வெரோனிக்கா மார்கோவை தன்னை மணமுடிக்குமாறு வினவும் பொழுது அவன் தன்னிலையை உணர்த்திச் சொல்லி அவளை என்றும் காதலிக்கவே விரும்புவதாக கூறுகிறான். இதனால் அவனை வெரோனிக்கா வெறுத்து விலகுகிறாள். காதல் துயரில் தவிக்கும் தருணத்தில், அவளின் தாய் அவளை தன் குல தொழிலான மேட்டுக்குடி விலைமகளாக (Courtesan) வற்புறுத்துகிறாள். ஏனெனில்,அவளின் தாய் வெரோனிக்கோவோடும், அவளின் தம்பி தங்கையோடும் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்.

வெரோனிக்கா அன்றைய காலகட்டத்தில் அவளால் தன் குடும்பத்தை இவ்வழியிலன்றி வேறு எத்தொழிலிலும் காப்பாற்றமுடியாத நிலையில் இருந்தாள்.  அதே நேரம் அவள் தாய், மேட்டுக்குடி விலைமகளாக இருப்பதில் உள்ள நற்வாய்ப்புகளை அவளுக்கு அறிமுகப்படுத்தினாள். அக்காலத்தில் மேட்டுக்குடி விலைமகள் ஆண்களுக்கு நிகராக கல்வியிலும், கலைகளிலும் சிறந்து விளங்கினர். அதற்கு காரணம், அன்று அவர்களுக்கு மற்ற பெண்களுக்கு மறுக்கப்பட்ட எல்லா உரிமைகளும் ஆண்களால் வழங்கப்பட்டிருந்தது. ஆண்கள் அவர்களின் அழகினில் மயங்கி இருந்த காரனத்தினலோ என்னவோ அவர்களை எந்த வகையிலும் மற்றப் பெண்களை போல அடக்கி ஆளவில்லை. வெரோனிகா தான் சிறந்த கவிதைகளை படிக்கவும், இயற்றவும் இத்தொழில் உதவும் என்ற காரணத்தினாலும், இதைதவிர வேறு எந்த வழியும் இல்லாத காரணத்தினாலும் மேட்டுக்குடி விலைமகளாக மாறுகிறாள்.  

அவளின் தாய், அவளுக்கு ஆண்களை மயக்கும் கலைகளை கற்றுத் தருகிறாள். சிறுது காலத்திலேயே தன் தொழிலில் இருந்த மற்றவர்களை விட அவள் சிறந்து விளங்கினாள். அரசவையில் இருந்த பெரும்பாலானவர்களை தன் வாடிக்கையாளராகப் பெருமளவுக்கு முன்னேறியிருந்தாள். அதே நேரம், தன் பிரபு பதவியின் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள மார்கோ, குலியா என்ற இன்னொரு பிரபு குலமகளை மணமுடிக்கிறான். மார்கோ எவ்வகையிலும் வெரோனிக்காவின் அறிவாலும், அழகாலும் தான் கவரப்பட்ட வகையில் தன் மனைவி குலியாவிடம் தான் கவரப்படவில்லை என்பதை வெகு விரைவில் உணர்கிறான். அவன் திரும்பவும் அவளின் காதலை பெற முயல்கிறான். ஆனால் அவள் இன்னொரு வாடிக்கையாளராக கூட அவனை ஏற்றுக்கொள்ள இயலாது என மறுக்கிறாள். 

வெரோனிக்கா மீது ஆசை கொண்ட ஏழை கவிஞன் மாஃபியோ அவளை அணுகுகிறான். அவனை வெரோனிக்கா தன் விலையை அவனால் தர முடியாது எனக் கூறி அவனை தவிர்க்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த அவன் இவளை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குகிறான். இவள் அவனோடு வார்சண்டை கொண்டு அவனை வீழ்த்தும் நேரத்தில் அவன் அவளை மூர்க்கமாக தாக்கி காயமுறச் செய்கிறான். மார்கோ அவனை தாக்கி கைது செய்ய உத்தரவிட்டு வெரோனிக்காவுக்கு உதவுகிறான். இச்சம்பவத்தால் அவன் காதலை உணர்ந்த வெரோனிக்கா, தன் தொழிலை விட்டு  அவனிடம் மட்டும் இருக்கலானாள்.   

வெனிஸ் மீது ஒட்டமான் அரசு போர் தொடுத்தது. வெனிஸ், பிரெஞ்சு அரசர் மூன்றாம் ஹென்றியிடம் உதவி கேட்டது. அரசரை மகிழ்விக்க முதல் தர மேட்டுக்குடி விலைமகள்  வெரோனிக்கா அனுப்பப்படுகிறாள். அவள் சென்றதில், மார்கோ அவளின் மீது கோபம் கொள்கிறான். வெரோனிக்கா,  மார்க்கோ கணவன் என்ற கடமையின் பெயரால் குலியாவிடம் செல்வது போலதான் தான் பிரெஞ்சு அரசரிடம் தன் நாட்டின்பால் கொண்ட மரியாதையினால் சென்றதாக தன்னிலை விளக்கமளித்தும்,  அவன் அவளோடு கோபம் கொண்டு போருக்கு செல்கிறான். 

இதே சமயத்தில், வெனிஸ் நகரை பிளேக் நோய் தாக்கி பலரை கொல்கிறது. இத்துயர், வெனிஸ் நகர மக்களுக்கு வர, அவர்களின் தவறான நடத்தையே காரணம் என மக்கள் கருதினர். இதனால் மக்கள் வெரோனிக்கா மற்றும் மற்ற மேட்டுக்குடி விளைமகர்களை தாக்கி, அவர்களின் சொத்துக்களை சூறையாடினர். அரசு, மக்களை கட்டுபடுத்த வெரோனிக்கா மீது ஆண்களை வஞ்சகமாக மயக்கும் சூன்யக்காரி (witchcraft) என்ற பழியை போட்டு அவளை சிறையிலடைக்கிறது. திரும்பி வந்த மார்க்கோ சிறையில் அவளிடம் அரசு சொல்லும் அத்தனை பொய்ப் பழிகளையும் ஏற்று மன்னிப்பு கேட்டு உயிர் தப்பிக்குமாரும், அவள் தனக்கு வேண்டுமென்றும் கெஞ்சுகிறான். 

வெரோனிக்காவிற்கு மன்னிப்பு கேட்க்கும வாய்ப்பைத் தவிர நீதி மன்றத்தில் பேச உரிமையில்லை. அவளுக்கு எதிராக அரசு மாஃபியோவை வழக்கறிஞனாக வாதாட வைக்கிறது. பாவத்தின் சம்பளமாக அவளின் உயிரை பறிக்க அவன் வாதாட, மார்க்கோ அவளை காப்பாற்ற முனைகிறான். ஆண்களை அத்தனை பேர் முன்னிலையில் வெரோனிக்கா நீதி மன்றத்தில் தன் விவேகமான வார்த்தைகளால் தன் நிலைக்கு தான் மட்டும் காரணமா என மன்னிப்பு கேட்கும் தொனியில் சாடி அனைவரையும் தலைகுனிய வைக்கிறாள். 

கேதரின் மக்கோர்மாக்
பிறகு, வரலாறே திரும்பி பார்க்கும் அந்த சம்பவம் அன்று நிகழ்ந்து முடிகிறது. அச்சம்பவத்தின் மூலம் இன்றளவும், வெரோனிக்கா பெண்ணிய சிந்தனைகளின் முதல் எதிரொலியாக வெனிஸ் நகரில் மட்டுமல்ல, நாமும் பேசுமளவுக்கு தன் பெயரை ஆணாதிக்க சமூகததில் ஆழமாக பதிய வைத்திருப்பதன் சாட்சியாக வெனிஸ் அரசு, மேட்டுக்குடி விளைமகர்கள் மீது எக்காரணம் கொண்டும் சூன்யக்காரி பழி போட தடை விதித்தது. வெரோனிக்கா தன் விவேகமான, உணர்ச்சித் ததும்பும் கவிதைகளால் (sonnet) வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்.  

இத்திரைப்படத்தில், கேதரின் மக்கோர்மாக் (Catherine McCormack), வெரோனிக்காவின் கதாபாத்திரத்தில் தன் அழகுடன் அதே நேரத்தில் அந்த கதாபாத்திரத்திற்குரிய செருக்குடன் நடித்துள்ளார். பிரேவ் ஹார்ட்(Brave Heart) படத்தில் நடித்த கேதரீனா இக்கதாப்பாத்திரத்தை செய்தார் என ஆச்சர்யப்பட வைக்கிறது அவரின் நடிப்பு.  வெனிஸ் நகர அரங்கமைப்பு மற்றும் ஆடை தேர்வு நிச்சயம் நம்மை பழமையான வெனிஸ் நகருக்கு அழைத்துச் செல்வதுடன் மட்டுமன்றி அந்த கலாச்சாரத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இசையும் முதல் தர வரிசையில் உள்ளது.  இருந்த போதிலும், இத்திரைப்படத்தை எந்த ஒரு விருதும் கண்டு கொள்ளாதது வருத்தமாகவே உள்ளது.    


ஹாலிவூட் மிகைபடுத்தப்பட்ட வரலாற்றுக் கதைகளையே கொண்டாடும் என்பதற்கு இத்திரைப்படம் இன்னுமோர் சாட்சி.  


ட்ரெயிலர்:-



Wednesday 23 February 2011

ஒய்ல் யு வேர் ஷ்லீப்பீங் - ஆங்கிலத் திரைப்பட விமர்சனம்



ஒய்ல் யு வேர் ஷ்லீப்பீங் (While you were sleeping) - இத்திரைப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி (Romantic Comedy) வகையினைச் சேர்ந்தது. சான்ட்ரா புல்லாக்கை (Sandra Bullock) நட்சத்திர அந்தஸ்துக்கு கொண்டு சேர்த்தத் திரைப்படம் என்றே கூறலாம். இதில் நடித்த கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகைக்கான கோல்டன் க்ளோப் விருதினை சான்ட்ரா பெற்றதிலிருந்தே அது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும். அதே சமயம் சான்ட்ரா நடித்து வெளி வந்த ஸ்பீட் (Speed) திரைப்படமும் வணிகரீதியாக வெற்றி பெற்று அவருக்கு ஒரு நீங்கா இடத்தை ஹாலிவுட்டில் (Hollywood) பிடித்து தந்தது. 

திரைப்படத்தில், லூசி  (சான்ட்ரா புல்லாக்) தனிமையில் பெற்றோரை இழந்து வாழும் ஒரு பெண். லூசி சிகாகோ ரயில் நிலையத்தில் பயணக் கட்டணம் வசூலிப்பவராக வேலை பார்த்து கொண்டு இருக்கிறாள். தினமும் காலை, மாலை ரயிலில் பிரயாணிக்கும் ஒருவனின்பால் (Peter Gallagher) தன்னையுமறியாமல் இணக்கவரப்படுகிறாள். தான் அவனுடன் இருந்தால், தான் சிறு வயதில் கனவு கண்ட அந்த கனவு வாழ்க்கை கைகூடும் எனத் தீர்க்கமாக நம்புகிறாள்.

ஒரு கிருஷ்துமஸ் அன்று, லூசி தன்னுடன் வேலை செய்யும் சக ஊழியர்களுக்கு விழாவிற்கு விடுப்பு அளித்துவிட்டு எல்லா விசேஷ நாட்களைப் போல தான் மட்டும் பணி செய்து கொண்டு இருக்கும் தருணத்தில் அந்த ஒருவன் சிலரால் ரயில் தண்டவாளத்தில் தள்ளப்படுகிறான். லூசி எதிரில் வரும் ரயிலினையும் பொருட்படுத்தாது, உடனே தண்டவாளத்தில் இறங்கி அவனை காப்பாற்றுகிறாள். அவன் பிறகு மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறான். 

மருத்துவமனையில் அவன் கோமாவில் இருப்பதால் அவனை காண அவனுடைய குடும்பத்தினருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று கூறி அவனை காண வந்த லூசியிடம் அலுவலர்கள் அவள் அவனுக்கு என்ன உறவு என்று வினவுகின்றனர். லுசியால் தான் அவனை ஒருதலையாக காதலிப்பதாகவும் அவன் பால் உள்ள அக்கறையினாலே அவனை காண வந்ததாகவும் கூற இயலவில்லை. அதே நேரத்தில் தனக்கு தானே லூசி தான் அவனை மணக்கப்போகும் பெண் என சொல்லிக் கொண்டு தன்னைத் தேற்றிக் கொள்கிறாள். இதனை பின் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஒரு நர்ஸ் (செவிலி) உடனே அவளை நோயாளியின் வருங்கால மனைவி என்று லூசியிடம் வினவிய அலுவலர்களிடம் கூறி அவளை அவனைக் காண அழைத்துச் செல்கிறார். 

அதே நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த அவனின் குடும்பத்தினர், தன் மகன் பீட்டர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளானா என வினவுகின்றனர். அலுவலர்கள் பீட்டர், அவன் வருங்கால மனைவி லுசியால் காப்பாற்றப் பட்டதாகவும், இன்னும் அவன் கோமாவில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதை சற்றும் எதிர்பார்க்காத லூசி அதனை மறுக்க முயலும் அதே நேரத்தில் அதனை மறுத்து அவர்களின் கவலையை மேலும் அதகரிக்க விரும்பாமல் பீட்டர் கோமாவில் தெளியும் வரை மறுக்காமல் நடித்து விடலாம் என முடிவெடுக்கிறாள்.  

இவ்வாறாக, ஒரு வாரம் லூசி பீட்டரின் வருங்கால மனைவியாக நடித்து கொண்டிருக்கும் வேலையில் பீட்டரின் சகோதரன் ஜாக்க்குடன் (Bill Pullman) லூசி  இயல்பாக காதல்வயப்படுகிறாள். ஒருவாறாக கோமாவிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பீட்டரால் தன் வருங்கால மனைவி என தன் குடும்பத்தாரால் கொண்டாடப்படும் லூசியை அடையாளம் காண முடியவில்லை. (உண்மையில் அவனுக்கு அவள் யாரென்றே தெரியாத பொழுது எங்கு அவளை அடையாளம் கண்டு கொள்வது?). இதனால் பீட்டர் குடும்பத்தினர் அவனுக்கு கஜினி பட சூர்யா போன்று அம்னீசியா என நம்புகின்றனர். பீட்டரும் தன் குடும்பம் நம்புவது போல தனக்கு  அம்னீசியா என்று நம்பி லூசி தன்னால் காதலிக்கப்பட்டு கரம் பிடிக்கப்போகும் மனைவி என நம்புகிறான். பின்னர் பீட்டர் லூசியிடம் தன்னை வரும் வாரத்திலேயே மணமுடிக்க சம்மதம் கேட்கிறான்.

இத்தருணத்தில், லூசி மணமுடிக்கப்போவது  தான் சிறு வயதிலிருந்தே கனவு கண்ட காதலன் பீட்டரையா  அல்லது தான் உண்மையிலேயே காதல் வயப்பட்ட ஜாக்கையா என்ற முடிவை மிகவும் இயல்பான நகைச்சுவையுடன் குடும்பத்தோடு காணும் விதத்தில் திரைப்படம் காட்டுகிறது. 

மிகவும் இயல்பான திரைக்கதை மற்றும் அமெரிக்கர்களால் மிகவும் கொண்டாடப்படும் கிருஷ்மஷ் பருவத்தில் கதை நகர்வதால் இது நிச்சயமாக வெற்றி பெரும் என்ற நம்பிக்கை, படம் எடுக்கத் துவங்கும் முன்னரே சான்றாவிற்கு இருந்தருக்க வேண்டும். அதனால்தான் என்னவோ முன்னதாக நடிக்கவிருந்த டெமி மூர் (Demi Moore) மறுத்த போது தானே முன்வந்து இத்திரைப்படத்தை ஒப்புக்கொண்டு நடித்தார். 

திரைப்படம் மற்ற ரொமாண்டிக் காமெடி வகை திரைப்படங்கள் போலவே  சான்றாவின் (Lead Female Character) கதாப்பாத்திரத்தை சுற்றியே நகர்கிறது. சான்றா தன் அளவான நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கறார். ஒரு மாலை பொழுதை உங்கள் பாட்னருடன் இனிமையாக கழிக்க வேண்டுமா? கண்டிப்பாக இத்திரைப்படம் உங்கள் பொழுதை இனிதாக்கும். 

ட்ரெய்லர்: 




எங்களைப் பற்றி

My photo
உலகம்
உலக சினிமா உங்களின் பார்வையில்

Followers

 
அயல் திரை. Design by Wpthemedesigner. Converted To Blogger Template By Anshul Tested by Blogger Templates.